பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதி நிதி பேராயர் மேதகு பியரே நியுபென் வன்ரொட் ஆண்டகை இன்று (30) வெள்ளிக்கிழமை மன்னாருக்கு வருகை தந்தார். இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் வைத்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல், மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை உட்பட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் இணைந்து பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதி நிதி பேராயர் மேதகு பியரே நியுபென் வன்ரொட் ஆண்டகை அவர்களை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மன்னார் பிரதான பாலத்தில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் வரை திறந்த வாகனத்தில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதி நிதி பேராயர் மேதகு பியரே நியுபென் வன்ரொட் ஆண்டகை மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை ஆகியோர் வலம் வந்தனர்.
இதன் போது பாடசாலை மாணவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மன்னார் மறைமாவட்ட மக்கள் ஆகியோர் பவனியாக ஆலயம் நோக்கி வந்தனர். மன்னார் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் விசேட திருப்பலி இடம் பெற்றதோடு நற்கருணை ஆசீர்வதமும் இடம் பெற்றது. இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
நாளை சனிக்கிழமை (31) மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டு 34 ஆம் ஆண்டு நிறைவு விழா மன்னார் தோட்டவெளியில் கொண்டாடப்படவுள்ளது. நாளை(31) சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தோட்டவெளி மறை சாட்சியர் அன்னை ஆலயத்தில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதி நிதி பேராயர் மேதகு பியரே நியுபென் வன்ரொட் ஆண்டகை தலைமையில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் பங்கேற்போடு விழாத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.